Saturday 22 March, 2008

அய்யனார்கள் மாநாடு

*
கெடா வெட்டி
சாராயம் வைத்து
தங்களை கும்பிட மட்டும் செய்து
குடித்து
தின்றுவிட்டு...

கடன்உடன் வாங்கி
யார்யார் சாமியோத் தேடிப்போய்
முடியையும் படியையும்
அளந்துவரும் பக்தர்களை எண்ணி
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
இவர்கள் அளக்கும் படிகளால்
அங்கே படிகளும்
தங்கமாய் மின்ன...

வெயிலிலும் மழையிலும்
வழியில்லாது நிற்பது குறித்து
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
அரிவாள் இருந்தும்
புண்ணியம் என்ன?
தங்கமும் காசும்
ரெண்டு பொண்டாட்டிகாரனுகளுக்குத்தானே போகுது
என்பதை எண்ணி
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
எல்லாச் சாமியும்
இந்துச் சாமி என்பது
தன் பக்தர்களுக்கு மட்டுந்தானா?

எந்த நாமக்காரனும்
பூணூல்காரனும்
எப்போதும் தன்னை
எட்டிப் பார்த்ததே கிடையாதே...

பக்தர்கள் பறிபோவதை
எண்ணி எண்ணி
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
பக்தர்களை மட்டும் சேர்த்துக் கொண்ட
பகல்வேசக்காரன்கள்
எப்போது தன்னையும் சேர்ப்பார்கள்
எனக் கனவு கண்டு
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
இனியும்
அரிவாளை மட்டும் தீட்டினால்
அனாதையாகி அழிந்து விடுவோம்
என்றஞ்சி
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
தங்களையும் நாயகர்களாக்கி
ஜகதலப் பிரதாபம் புரிந்ததாய்
எந்த பக்தனும் கதை புனையாததை
நினைத்து நினைத்து
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
நரியைப் பரியாக்கி
பரியை நரியாக்கி
கதை எழுதிவிட்டு
உட்கார்ந்து தின்று
கொழுக்கும் கூட்டம்
இன்று
தனது பரியையும் புலியாக்கி
அய்யன் ஆனார் எனப் புதுக்கதை கூறி
அய்யப்பன் ஆக்கிடத் துடிக்கும்
அவலத்தை எண்ணி எண்ணி
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
கெடா வெட்டும்
சாராயமும்
குதிரையும்
இன்னும் எத்தனை நாளைக்கோ...
பீதியில்
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

வெண்பனியே

வெண்பனியே
ஆற்றங் கரையோரம் தென்றலில் ஆடும்செந்
நாற்றின் கரையோர வெண்பனியே - நேற்று
விழுந்த கதிரவன் இன்று வருமுன்
எழுந்தென் கவியினுள் வா!